சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.71 திருமறைக்காடு (வேதாரண்யம்) பண் - காந்தாரம் |
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
|
1 |
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
|
2 |
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே.
|
3 |
நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந் தெற்றும்மறைக் காடே.
|
4 |
சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற
வங்கததொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
|
5 |
அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப்
படருஞ்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற் கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர்மறைக் காடே.
|
6 |
முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
|
7 |
நலம்பெரிய சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
|
8 |
குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங்
கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின்
எண்டோளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே.
|
9 |
பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை பங்கன்மறைக் காட்டை
ஆரூரன் தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |